search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பியை கொன்ற அண்ணன்"

    • சொத்து தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 47), இவரது தம்பி திருமலை (44). இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்கள் கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பொதுவான வீட்டை இரண்டாக பிரித்து இருவரும் தனித்தனி வாசல் ஏற்படுத்தி வசித்து வந்தனர்.

    ஏழுமலைக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து பெரிய ஏரி கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. திருமலைக்கு திருமணம் ஆகாததால் அவர் தனியாக வசித்து வந்தார்.

    ஏழுமலையிடம் பொது வீட்டை விற்க வேண்டும். எனவே, வீட்டின் பத்திரத்தை கொடு என திருமலை கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலையை திருமலை எழுப்பினார் அப்போது வீட்டை விற்பதற்கு பத்திரத்தை தருகிறாயா?, இல்லையா? என்று கேட்கவே அவர்களுக்குள் மோதல் முற்றியது.

    அதனால் ஆத்திர மடைந்த ஏழுமலை வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து திருமலையை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு திருமலை ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இறந்த அவரை வீட்டு தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டிக்கு இழுத்துச் சென்றார். அங்கு தொட்டிக்குள் திருமலையை தள்ளிவிட்டு மண்ணை கொட்டி மூடினர்.

    பின்னர் ஏழுமலை தலைமறைவாகி விட்டார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் நடந்த சண்டை குறித்து விசாரிப்பதற்காக அவர்களது வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் பார்த்தனர். அப்போது தோட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் மண்ணுக்குள் திருமலை புதைக்கப்பட்டு கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருமலையின் உடலை மீட்டு வெளியே எடுத்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான ஏழுமலையை தேடி கண்டுபிடித்தபோது நடந்த சம்பவத்தை கூறி ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×